1447-ஆம் ஹிஜ்ரி (2026) ஆண்டிற்கான புனித ஹஜ் கடமையை இனிதே நிறைவு செய்த ஹாஜிகள் தத்தம் தாய்நாடுகளுக்குத் திரும்புவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், சவூதி அரேபியாவின் பொது பாஸ்போர்ட் இயக்குநரகம் அதிநவீன தொழில்நுட்பத் தீர்வுகளைக் களமிறக்கியுள்ளது. இதற்காக நாட்டின் அனைத்து சர்வதேச விமான, தரை மற்றும் கடல்வழி எல்லைகளிலும் ‘இ-கேட்ஸ்’ (E-gates) எனப்படும் மின்னணு நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பின் மூலம் ஹாஜிகள் தங்களின் பயோமெட்ரிக் (Biometric) தரவுகளைச் சரிபார்த்து, சில நொடிகளிலேயே தங்களின் புறப்பாடு நடைமுறைகளைத் தாங்களாகவே சுலபமாக முடித்துக்கொள்ள முடிகிறது. இதன் விளைவாக, பன்னாட்டு விமான நிலையங்களில் உள்ள பாஸ்போர்ட் சரிபார்ப்பு மையங்களில் ஹாஜிகள் நீண்ட நேரம் காத்திருப்பது பெருமளவு குறைக்கப்பட்டு, அவர்களின் பயணம் மிகவும் விரைவானதாகவும் தடையற்றதாகவும் மாறியுள்ளது.
மின்னணு நுழைவாயில்களுக்கு அடுத்தபடியாக, பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள ஹாஜிகளுடனான தகவல் தொடர்பை மேம்படுத்துவதற்காகச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் அதிநவீன உடனடி மொழிபெயர்ப்புக் கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. சுமார் 138 மொழிகளில் இயங்கும் இந்தக் கருவிகள் மூலம், பல்வேறு மொழிகள் பேசும் ஹாஜிகளின் தேவைகளை உடனுக்குடன் புரிந்துகொண்டு அவர்களின் பாஸ்போர்ட் நடைமுறைகளை மிக விரைவாகவும் அதிகத் திறனுடனும் அதிகாரிகளால் முடிக்க முடிகிறது. இது தவிர, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக ‘நடமாடும் கவுண்டர்கள்’ (Mobile Counters) எனும் புதுமையான மின்னணுச் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் வரிசையில் எவ்விதக் காத்திருப்புமின்றி மிக எளிதாகவும் விரைவாகவும் தங்கள் பயண நடைமுறைகளை முடித்துக்கொள்ள முடியும் எனப் பாஸ்போர்ட் இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரான மேஜர் நாசர் அல்-ஒதைபி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹாஜிகள் தடையின்றித் தங்கள் தாய்நாடுகளுக்குத் திரும்புவதை உறுதி செய்வதற்காகச் சவூதி அரேபியாவின் அனைத்து சர்வதேச எல்லைகளிலும் 24 மணி நேரமும் இடைவிடாது செயல்படக்கூடிய தகுதிவாய்ந்த பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். நடப்பு 2026-ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, வெளிநாடுகளிலிருந்து வந்த 1,546,655 பேர் மற்றும் சவூதியின் உள்நாட்டைச் சேர்ந்த 160,646 பேர் என மொத்தம் 1,707,301 ஹாஜிகள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளனர். பாதுகாப்பு, சிறப்பான மேலாண்மை மற்றும் உயர்தரச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான ஒருங்கிணைந்த கட்டமைப்பின் மூலம், ஹாஜிகள் எவ்வித இடையூறுமின்றித் தங்கள் புனிதக் கடமைகளை நிறைவேற்றியுள்ளதாகவும், இந்த ஆண்டு ஹஜ் பயணம் மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும் சவூதி அரேபியா பெருமிதத்துடன் அறிவித்துள்ளது.






