போர் மற்றும் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளுக்குச் சவுதி அரேபியா தொடர்ந்து தனது உதவிக் கரங்களை நீட்டி வருகிறது. சவுதியின் ‘கிங் சல்மான் மனிதாபிமான மற்றும் நிவாரண மையம்’ (KSrelief) காசா, ஏமன் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் கடந்த சில நாட்களாக மாபெரும் நிவாரணப் பணிகளை முன்னெடுத்துள்ளது.
காசாவில் பசியாற்றும் பணி: பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகச் சவுதி மக்கள் முன்னெடுத்துள்ள மாபெரும் நிவாரணப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, காசா முனையின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சவுதி நிவாரண மையத்தின் மத்திய சமையலறை (Central Kitchen) மூலம் நேற்று மட்டும் சுமார் 27,820 சூடான உணவுப் பொட்டலங்கள் (Hot meals) தயார் செய்யப்பட்டு, 27,820 பேருக்கு நேரடியாக விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஏமனில் தங்குமிட உதவிகள்: மறுபுறம், ஏமனின் அல்-ஜவ்ஃப் (Al-Jawf) மாகாணத்தில் உள்ள அல்-ரயான் முகாம்களில் அவசரகாலத் தங்குமிட உதவித் திட்டத்தின் ஐந்தாம் கட்டமாகச் சவுதி அரேபியா பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளது. போரால் வீடுகளை இழந்த மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க 400 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பைகள் (Shelter bags) மற்றும் 100 கூடாரங்கள் (Tents) வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 2,040 பேர் நேரடியாகப் பயனடைந்துள்ளனர்.
வங்கதேச அகதிகளுக்கு உணவுத் தொகுப்புகள்: மத்திய கிழக்கைத் தாண்டி ஆசியாவிலும் சவுதியின் மனிதாபிமானப் பணிகள் தொடர்கின்றன. வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் (Cox’s Bazar) மாகாணத்தில் உள்ள தேக்னாஃப் (Teknaf) நகரில் உள்ள அகதிகள் முகாம்களிலும் சவுதி அரேபியா உணவுப் பொருட்களை வழங்கியுள்ளது. அங்கு வாழும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் மற்றும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள 1,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 5,000 பேருக்கு அத்தியாவசிய ‘உணவுத் தொகுப்புகள்’ (Food baskets) பாதுகாப்பாக விநியோகிக்கப்பட்டுள்ளன.
உலகின் எந்த மூலையில் மக்கள் துயரங்களைச் சந்தித்தாலும், அங்கு முதல் நாடாகச் சென்று மனிதநேயப் பணிகளை மேற்கொள்வதில் சவுதி அரேபியா தனது தனித்துவமான நிலைப்பாட்டைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.





