போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை லெபனான் அரசு வெற்றிகரமாக மேற்கொண்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான ஏற்றுமதித் தடையை சவூதி அரேபியா விலக்கிக் கொண்டுள்ளது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, லெபனானின் பெய்ரூட் துறைமுகத்திலிருந்து சவூதி அரேபியாவின் ஜெத்தா இஸ்லாமிய துறைமுகத்திற்கு முதல் சரக்கு பெட்டகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தங்கள் நாட்டின் மீட்சிக்கு வழிகோலும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை லெபனான் அரசு மனதார வரவேற்றுள்ளது.
சவூதி அரேபியாவிற்கு அனுப்பப்படும் சரக்குகளைக் கண்காணிப்பதற்காக, பெய்ரூட் துறைமுகத்தில் அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்களை லெபனான் நிறுவியுள்ளது. இதன் மூலம் பொருட்கள் துல்லியமாக பரிசோதிக்கப்பட்டு, ஏற்றுமதி நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. லெபனானின் மிகப் பெரிய ஏற்றுமதி சந்தையாக சவூதி அரேபியா விளங்கும் நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ள இந்த வர்த்தக உறவு லெபனான் பொருளாதாரத்திற்குப் பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது.
லெபனான் அதிபர் ஜோசப் ஓன் மற்றும் பிரதமர் டாக்டர் நவாஃப் சலாம் ஆகியோரின் கோரிக்கையை ஏற்றும், நாட்டின் நிர்வாகக் கட்டமைப்புகளை மறுகட்டமைக்க லெபனான் அரசு எடுத்த நேர்மறையான நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டும், லெபனான் ஏற்றுமதிக்கான தடையை நீக்க சவூதி பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மான் உத்தரவிட்டிருந்தார். இது லெபனான் மக்கள் மீதான சவூதி அரேபியாவின் அக்கறையையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு அவர்கள் வழங்கும் ஆதரவையும் பிரதிபலிப்பதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.
பெய்ரூட் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த ஏற்றுமதி தொடக்க விழாவில், லெபனானுக்கான சவூதி தூதர் ஃபஹ்த் அல்-தோசாரி, லெபனான் பிரதமர் நவாஃப் சலாம் மற்றும் நிதி, தொழில், விவசாயம் மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய லெபனான் பிரதமர் நவாஃப் சலாம், “லெபனான் நீண்டகாலமாகக் காத்திருந்த தருணம் இது. முன்னர் அரபு நாடுகளுக்கு, குறிப்பாக சவூதிக்கு சட்டவிரோதப் பொருட்களைக் கடத்த லெபனான் ஒரு பாதையாகப் பயன்படுத்தப்பட்டது வேதனைக்குரியது. எனினும், அதிநவீன இயந்திரங்கள் மூலம் துறைமுக கண்காணிப்பைக் கட்டுக்குள் கொண்டுவந்ததே இந்தத் தடை நீக்கத்திற்கு முக்கியக் காரணமாகும்” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், “சவூதி சந்தைகளுக்குள் மீண்டும் நுழைவது பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், பல்வேறு நெருக்கடிகளிலும் தாக்குப் பிடித்த தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இது ஒரு குறிப்பிட்ட துறையை மட்டுமன்றி ஒட்டுமொத்தப் பொருளாதாரச் சங்கிலியையும் உயிர்ப்பித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், அந்நியச் செலாவணி வரவையும் உறுதி செய்யும்” எனத் தெரிவித்தார். சவூதி தூதர் ஃபஹ்த் அல்-தோசாரி பேசுகையில், சவூதி அரேபியா எப்போதுமே லெபனானின் ஸ்திரத்தன்மை, இறையாண்மை மற்றும் மக்களின் நல்வாழ்வுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்பதையும், அண்டை நாடுகளுக்குத் தீங்கு விளைவிக்கும் தளமாக லெபனான் இனி ஒருபோதும் செயல்படாது என்ற முழு நம்பிக்கை சவூதி அரேபியாவிற்கு இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.






