அமெரிக்க நிர்வாகத்தின் கணிப்புப்படி, ஈரானின் ஆட்சி அதிகாரத்திலும், முடிவெடுக்கும் கட்டமைப்பிலும் பெரும் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. “ஈரானியப் பேச்சுவார்த்தைக் குழுவினர் பொதுவெளியில் ஒன்றையும், ரகசியமாக மற்றொன்றையும் கூறுகின்றனர்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்லாமாபாத்தில் நடந்த முதல் கட்டப் பேச்சுவார்த்தையின் போதே இந்த விரிசல் வெளிச்சத்திற்கு வந்தது. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பகேர் காலிபாஃப் தலைமையிலான குழுவினர் விவாதித்த பல முக்கிய முடிவுகளை, ஈரானியப் புரட்சிகரக் காவற்படையின் (IRGC) தளபதி ஜெனரல் அகமது வாஹிதி மற்றும் அவரது பிரதிநிதிகள் திட்டவட்டமாக நிராகரித்தனர்.
ஹார்முஸ் நீர்ச்சந்தி விவகாரத்தில் முரண்பாடு: இந்த அதிகார மோதல் பொதுவெளியிலும் எதிரொலித்துள்ளது. ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi), ஹார்முஸ் நீர்ச்சந்தி மீண்டும் திறக்கப்படும் என அறிவித்தார். ஆனால், உடனடியாகத் தலையிட்ட IRGC, “நீர்ச்சந்தி தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்; ஈரானுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிராத நாடுகளுக்கு மட்டுமே எங்கள் அனுமதியுடன் செல்ல விதிவிலக்கு அளிக்கப்படும்” என அறிவித்தது. மேலும், ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையை விலக்கக் கோரி, இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையையும் ஈரான் புறக்கணித்துள்ளது.
தலைமை வெற்றிடமும் புதிய ஆதிக்கமும்: கடந்த மார்ச் மாதம் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் செயலாளர் அலி லாரிஜானி (Ali Larijani) இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டதே இந்தக் குழப்பங்களுக்கு முக்கியக் காரணமாகும். அவருக்குப் பின் வந்த முகமது பகேர் ஜொல்கத்ர் (Mohammad Bagher Zolqadr), IRGC-க்கும், சிவில் நிர்வாகத்திற்கும், புதிய உச்சத்தலைவர் முஜ்தபா காமேனிக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளார். இதனால் காவற்படைத் தளபதி அகமது வாஹிதி (Ahmad Vahidi) முழு அதிகாரத்தையும் தன் கையில் எடுத்துள்ளார்.
யார் இந்த அகமது வாஹிதி? பிப்ரவரி 28 அன்று ஈரானின் முன்னாள் உச்சத்தலைவர் அலி காமேனி மற்றும் IRGC தளபதி முகமது பக்பூர் ஆகியோர் அடுத்தடுத்துப் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 67 வயதான வாஹிதி இந்தப் பதவியை ஏற்றார். அதன்பிறகு அவர் பொதுவெளியில் எங்கும் தோன்றவில்லை. 1979-ல் IRGC-யில் இணைந்த இவர், லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹவுதிகள் மற்றும் ஹமாஸ் போன்ற குழுக்களை உருவாக்கிய ‘குட்ஸ் படையின்’ (Quds Force) முதல் தளபதியாகச் செயல்பட்டவர். பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்த இவர் மீது, 1994 அர்ஜென்டினா குண்டுவெடிப்பு தொடர்பாக இன்டர்போல் பிடியாணை உள்ளது.
இருத்தலுக்கான போராட்டம்: தற்போதைய போர்ச் சூழலில் வாஹிதியின் அதிகாரம் பெருகியிருந்தாலும், அவர் மட்டுமே ஈரானின் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் எனக் கூற முடியாது என ஈரானிய ஆய்வாளர் அலி வாவெஸ் (Ali Vaez) கூறுகிறார். “ஈரானின் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலில் வாஹிதிக்கு வலுவான குரல் உள்ளது. தற்போதைய நெருக்கடி ஈரானியத் தலைவர்களைப் பிளவுபடுத்துவதற்குப் பதிலாக, அவர்களை ஒன்றிணைத்துள்ளது; அனைவரும் ஒரே படகில்தான் பயணிக்கிறோம் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்” என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு வழங்கியுள்ள “கடைசி வாய்ப்பு” மற்றும் கெடு முடிவடைய உள்ள நிலையில், மூழ்கும் படகை ஈரானியத் தலைவர்கள் காப்பாற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
قناة العربية/ انقسامات داخل إيران.. قائد الحرس الثوري يمسك خيوط القرار
http://nabdapp.com/t/171507765
عبر تطبيق نبض
https://nabd.com/download






