உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு, உலகெங்கிலும் உள்ள அகதிகள் மற்றும் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆதரவளிப்பதில் தனது முன்னணி மனிதாபிமானப் பங்கை சவூதி அரேபியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. கிங் சல்மான் மனிதநேய உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அமைப்புகளின் மூலம், பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான விரிவான நிவாரணத் திட்டங்கள் சவூதியால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச அளவில் அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்காக சவூதி அரேபியா இதுவரை சுமார் 23.761 பில்லியன் டாலர்களை உதவித்தொகையாக வழங்கியுள்ளது. உலகளவில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் மிகப்பெரிய நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியா தொடர்ந்து முன்னிலை வகிப்பதையும், மனித மாண்பைக் காப்பதில் அது கொண்டுள்ள உறுதியையும் இந்த இமாலயத் தொகை உணர்த்துகிறது. மேலும், சவூதியில் தஞ்சமடைந்துள்ள ஏமன், சிரியா, சூடான் மற்றும் ரோஹிங்கியா அகதிகளுக்கு 2026 ஆம் ஆண்டு வரை சுமார் 20.430 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சவூதி அரேபியாவின் மொத்த மக்கள் தொகையில் 5.5% ஆக உள்ள இந்த அகதிகளுக்கு இலவச மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகிய நன்மைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
கிங் சல்மான் மையம் சார்பாக, அகதிகள் முகாம்களை அமைத்தல், நடமாடும் மருத்துவமனைகளை இயக்குதல், உணவுத் தொகுப்புகள், கூடாரங்கள், போர்வைகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் எவ்விதப் பாகுபாடுமின்றி உரியவர்களுக்குச் சென்று சேரும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களால் அதிகம் பயனடைந்த நாடுகளின் பட்டியலில் சிரியா முதலிடத்தில் உள்ளது. அங்கு சுமார் 290 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான செலவில் 254 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஜோர்தானின் ஜாதாரி முகாமில் மருத்துவமனைகளை இயக்குதல், லெபனானில் குளிர்கால ஆடைகள் விநியோகம், மற்றும் சிரிய அகதிகளுக்கு 6 மில்லியனுக்கும் அதிகமான ரொட்டிப் பொட்டலங்களை வழங்கிய ‘அல்-அமல்’ தொண்டு பேக்கரி ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவையாகும்.
ஏமன் அகதிகளுக்காக, ஜிபூட்டியின் ஓபோக் (Obock) மாகாணத்தில் பிரத்தியேக சவூதி கிராமத்தை நிர்வகித்தல், ஆரம்ப மற்றும் அவசர மருத்துவச் சேவைகளை வழங்குதல் என சுமார் 145 மில்லியன் டாலர்கள் மதிப்பில் 49 திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல், பாலஸ்தீனத்தில் உணவுப் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் ரொட்டி தயாரிப்பு உபகரணங்களை வழங்குதல் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக 17 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மதிப்பில் 41 திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, ஐ.நா. அகதிகள் ஆணையத்துடன் (UNHCR) இணைந்து ஏமனில் உள்ள 44,722 அகதிகளின் பாதுகாப்பிற்காக 3 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான திட்டமும், உக்ரைனில் 23,696 பேர் மற்றும் புர்கினா பாசோவில் 17,000 பேர் பயனடையும் வகையிலான அவசரத் திட்டங்களும் மையத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, கிங் சல்மான் மனிதநேய மையம் உலகெங்கிலும் உள்ள 113 நாடுகளில் 8.482 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான செலவில் 4,394 மாபெரும் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம், போரினாலும் வறுமையினாலும் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளுக்கு உதவியையும் நம்பிக்கையையும் கொண்டு சேர்க்கும் சவூதி அரேபியாவின் உன்னதமான மனிதாபிமானப் பணி மென்மேலும் விரிவடைந்து வருவது வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.






