ஏமனில் இயங்கி வரும் மின் உற்பத்தி நிலையங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, சவூதி அரேபியா சுமார் 150 மில்லியன் டாலர் மதிப்பிலான எரிபொருட்களை (Fuel Derivatives) அவசரகால உதவியாக வழங்கியுள்ளது. சவூதியின் இந்த மாபெரும் உதவிக்கு ஏமன் அதிபர் கவுன்சில் தலைவர் டாக்டர் ரஷாத் அல்-அலிமி அவர்கள் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளத்தில் பதிவிடுகையில், “தீவிரவாத ஹவுதி கிளர்ச்சியாளர்களால் எங்கள் மக்கள் அனுபவித்து வரும் துயரங்களைக் குறைக்கும் வகையில், மின் நிலையங்களை இயக்குவதற்காக வழங்கப்பட்டுள்ள இந்த புதிய எரிபொருள் மானியத்திற்காக சவூதி அரேபியாவின் தலைவர்கள், அரசாங்கம் மற்றும் மக்களுக்கு என் சார்பிலும், கவுன்சில் மற்றும் அரசாங்க உறுப்பினர்கள் சார்பிலும் ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தச் தாராளமான நிதியுதவியானது சவூதி மன்னர் சல்மான் மற்றும் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரின் தலைமையிலான சவூதி அரேபியாவின் சிறப்பான நிலைப்பாட்டையும், ஏமனின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான அவர்களின் வலுவான அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக அவர் பெருமிதத்துடன் கூறினார்.
சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஜீஸ் மற்றும் முடிக்குரிய இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் ஆகியோரின் நேரடி உத்தரவின் பேரிலும், பாதுகாப்புத் துறை அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மான் அவர்களின் தொடர் கண்காணிப்பிலும் இந்த அவசரகால உதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏமனின் பல்வேறு மாகாணங்களில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான டீசல் மற்றும் மாசூட் (Mazut) எரிபொருட்கள் தடையின்றி கிடைக்கும். போரினால் சோர்வடைந்துள்ள ஏமனின் மின்சாரக் கட்டமைப்பை மேம்படுத்துதல், அடிப்படைச் சேவைகளின் தொடர்ச்சியை உறுதி செய்தல், மக்களின் இயல்பு வாழ்க்கையை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார மீட்சியை ஏற்படுத்துதல் ஆகிய உயரிய நோக்கங்களை மையமாகக் கொண்டு இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ஏமன் மக்களின் துயரங்களைத் துடைப்பதில் சவூதி அரேபியா கொண்டுள்ள ஆழமான அக்கறையை இது காட்டுகிறது என ஏமன் நாட்டு அதிகாரிகள் பலரும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
‘ஏமனின் வளர்ச்சி மற்றும் மறுகட்டமைப்பிற்கான சவூதி திட்டத்தின்’ (SDRPY) கீழ் வழங்கப்பட்டுள்ள இந்த 150 மில்லியன் டாலர் எரிபொருள் மானியமானது, குடிமக்களின் அடிப்படைச் சேவைகளை மேம்படுத்திப் பொருளாதார மீட்சியை அடைவதற்காகச் சவூதி அரேபியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவின் ஒரு நீட்சியாகும் என ஏமன் பிரதமர் டாக்டர் ஷாயே அல்-ஜிந்தானி உறுதிப்படுத்தியுள்ளார். “மின்சாரச் சேவையை மேம்படுத்துவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ள இந்த உதவியை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவப் பிணைப்பையும் பகிரப்பட்ட விதியையும் இது ஆழமாகப் பிரதிபலிக்கிறது” என்று அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், ஏமன் அமைச்சரவையும் சவூதியின் இந்த அவசரகால உதவியைப் பாராட்டி அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பல ஆண்டுகளாகத் தொடரும் போரினால் ஏமனின் மின்சாரத் துறை முற்றிலுமாகச் செயலிழந்துள்ள நிலையில், நாட்டின் பொருளாதார மீட்சிக்கும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் சவூதியின் இந்த உதவி ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என ஏமன் மக்களும் தலைவர்களும் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.





