மூடப்பட்டுள்ள உலகின் முக்கியக் கடல் வழியான ‘ஹார்முஸ் ஜலசந்தியை’ (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த முக்கிய அமைச்சரவைக் கூட்டம் பிரிட்டன் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் சுமார் 35 நாடுகள் பங்கேற்றன. சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் சார்பாக, அந்நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் பொறியாளர் வலீத் அல்-குரைஜி இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சவுதியின் நிலைப்பாட்டைப் பதிவு செய்தார்.
கடல்வழிப் பாதுகாப்பு மற்றும் சர்வதேச நிலைத்தன்மை இந்த உயர்மட்டக் கூட்டத்தில், சர்வதேச கடல்வழிப் போக்குவரத்து மற்றும் ‘பாப் அல்-மண்டேப்’ (Bab el-Mandeb) நீரிணையில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதற்கான நடைமுறை முயற்சிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பையும், பொருளாதார நிலைத்தன்மையையும் சீராகப் பராமரிக்க ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான போக்குவரத்தை உடனடியாக உறுதி செய்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
ஈரானின் அச்சுறுத்தல்களுக்குக் கடும் கண்டனம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் சர்வதேச கடல்வழி வர்த்தகத்தைத் தடுக்கும் அல்லது அதில் தலையிடும் நோக்கத்தோடு ஈரான் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடுகள் தங்களின் கடுமையான கண்டனத்தை மீண்டும் ஒருமனதாகப் பதிவு செய்தன. மேலும், பாப் அல்-மண்டேப் நீரிணையில் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கூட்டு நடவடிக்கைக்கான அழைப்பு சுதந்திரமான கடல்வழிப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவது என்பது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு விடப்படும் ‘மிகப்பெரிய அச்சுறுத்தல்’ என உலக நாடுகளின் தலைவர்கள் எச்சரித்தனர். கடல்சார் பாதுகாப்பைக் காக்கவும், உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்படாமல் இருக்கவும், சரக்குக் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசர மற்றும் அவசியம் என்றும் இக்கூட்டத்தில் ஆணித்தரமாகத் தெரிவிக்கப்பட்டது.






