கடந்த பிப்ரவரி 28-ல் மத்திய கிழக்கில் போர் தொடங்கியதற்குப் பிறகு முதல்முறையாக சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் ஒரு முக்கிய முத்தரப்பு உச்சிமாநாடு இன்று நடைபெற்றது. சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் ஆகியோர் இதில் நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
வளைகுடா நாடுகள் மற்றும் ஜோர்டானின் முக்கிய சிவிலியன் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இந்த மாநாட்டில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஈரானின் இந்த நடவடிக்கைகள் பிராந்தியத்தின் அமைதி, சர்வதேச கடல்வழிப் போக்குவரத்து மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு விடப்படும் ‘மிகப்பெரிய அச்சுறுத்தல்’ எனத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுப்பதாகக் கூறிக்கொண்டு ஈரான் நடத்தும் இந்தத் தாக்குதல்களால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்கவும், அமைதிக்கான தீர்வுகளை முன்னெடுக்கவும் இந்த நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளன. ஈரானின் அத்துமீறல்களுக்குப் பதிலளித்தாலும், “நாங்கள் இந்தப் போரில் ஒரு தரப்பாக (Party to the war) மாற விரும்பவில்லை” என்பதை சவுதி, கத்தார் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் ஆணித்தரமாகத் தெளிவுபடுத்தியுள்ளன.
மேலும், ஆயுதக்குழுக்களுக்கு ஈரான் நிதியுதவி மற்றும் ஆயுதங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இதுவரை நடந்த தாக்குதல்களால் ஏற்பட்ட இழப்புகளுக்கு ஈரான் முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரபு நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. அதேவேளையில், சட்டவிரோத ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் லெபனான் அரசின் முடிவுக்கு இம்மாநாட்டில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது






